![](admin/uploads/.5c8a25890aa556.63883294.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோயம்புத்தூரில் காளையை குளிப்பாட்டிய போது டிக் டாக் வீடியோ எடுத்த வாலிபர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்துர் மாவட்டம் கருத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் தான் வளர்த்து வரும் காளை மாட்டை குளிப்பாட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள குட்டைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அவருடன் இருந்த நண்பர்கள் மூன்று பேர் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் விக்னேஸ்வரனுக்கும் ஆசை தொற்றிக்கொண்டது. அதையடுத்து நீச்சல் தெரியாமல் கரையில் இருந்து காளை மாட்டுடன் விளையாடி கொண்டிருந்த அவர் தன்னை டிக் டாக் வீடியோ எடுங்கள் என நண்பர்களிடம் கூறினார்.
இதனால் அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது விக்னேஸ்வரன் காளை மாட்டின் முதுகில் ஏறுவது, மாட்டினை தண்ணீருக்குள் பிடித்து அழுத்துவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மிரண்டு போன காளை விக்னேஸ்வரனை ஆழத்திற்குள் இழுத்துச் சென்றது.
இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் காணாமல் போயுள்ளார். நண்பன் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதை கண்டு அதிர்ச்சியான அவரது நண்பர்கள் மூன்று பேரும் குட்டையில் மூழ்கி தேடி பார்த்தனர். ஆனால் விக்னேஸ்வரனை மீட்க முடியவில்லை.
இதனால் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் குட்டையில் மூழ்கி இறந்து போன விக்னேஸ்வரனின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது