Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோடு: பழங்குடிக் குழந்தைகளுக்கு 70 கிலோ பிரியாணி விருந்து

நவம்பர் 27, 2019 01:13

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிக் குழந்தைகளுக்கு பிரியாணி சமைக்கப்பட்டு, சுடச்சுடப் பரிமாறப்பட்டிருக்கிறது. 

பழங்குடியின குழந்தைகளுக்கு சுமார் 70 கிலோ பிரியாணி சமைத்து வழங்கி அவர்களின் ஆசையை சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பூர்த்தி  செய்துள்ளார். இதற்காக பர்கூரில் உள்ள கொங்காடை, போரதொட்டி, அக்னிபாவி, பேடரலா, சுண்டைப்போடு ஆகிய மலைக்கிராமத்தைச் சேர்ந்த  குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் தாமரைக்கரை என்னும் பகுதிக்கு அனைத்துக் குழந்தைகளும்  அழைத்து வரப்பட்டனர். 

பிரியாணி தயாராகும் வரை மேஜிக் கலைஞர், குழந்தைகளுக்கு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் ஏராளமான கதைகள்  சொல்லப்பட்டன. படிப்பின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கப்பட்டது. தொடர்ந்து, கோழி வறுவலுடன், ஆவி பறக்க சிக்கன் பிரியாணி தயாரானவுடன்  சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.


இது குறித்து தொழிலதிபர் கண்ணன் கூறுகையில், 

ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவினேன். இதற்கிடையே நண்பர் ஒருவர் பர்கூரில் உள்ள மலைவாழ் குழந்தைகளின்  நிலை குறித்துப் பேசினார். நானும் நேரடியாகப் போய்ப் பார்த்தேன். அவர்களும் பேசிக் கொண்டிருக்கும்போது சாப்பாட்டைப் பற்றிப் பேச்சு வந்தது.  'இட்லி, தோசை என்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கால உணவு' என்றனர். சிலருக்கு பிரியாணி என்ற பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.தாத்தாவின் நினைவு நாளான நவ.24-ம் தேதி பிரியாணி வழங்க  முடிவெடுத்தேன்.

70 கிலோ  பிரியாணியும் சிக்கன் வறுவலும் அங்கேயே தயாரானது. சுமார் 13 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் 300 பேருக்கு அவற்றை வழங்கினோம்.  அத்தனை பேரும் ரசித்து, ருசித்து பிரியாணியை உண்டனர். இன்னும் சிலர் தயக்கத்துடன், 'வீட்டுக்கும் இதை எடுத்துச் செல்லலாமா?' என்று  கேட்டனர். அவர்களுக்கும் கொடுத்தனுப்பினோம். பயத்தை உடைக்க, சுய அறிமுகப் படலம் குழந்தைகளுக்கு இடையே நடத்தப்பட்டது. அசைவ உணவு தயாராகும் வரை குழந்தைகளுக்கு இனிப்பையும்  சாக்லேட்டுகளையும் வழங்கினோம்.

மலைவாழ் குழந்தைகளுக்கு அளித்த சாப்பாட்டால் மட்டுமே, அவர்களின் குறைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. அவர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்புக்கான  அனைத்து உதவிகளையும் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.இயற்கையின் குழந்தைகளான  மலைவாழ் மக்களுக்கு போதிய ஊட்டச்சத்தும் தரமான கல்வி, சுகாதார வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக  ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்