![](admin/uploads/.64b8bec6587771.98533476.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அதிமுக எம்.பி ரவீந்திரநாத்தின் கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது.
அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி யான தேனி எம்.பி ரவீந்திரநாத் குமாரின் அதிகாரப்பூர்வ அறிக்கை படிவத்தில் (லெட்டர் பேட்) பிரதமர் மோடியின் உருவப்படம் இடம்பெற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார் மாநில துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்.
தமிழகத்தில் இருந்து சென்ற அனைத்து எம்.பிக்களும் பெரியார் வாழ்க, மார்க்ஸ் வாழ்க, அண்ணா வாழ்க, சமத்துவம் ஓங்குக, வெல்க தமிழ் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து பதவியேற்ற போது, பாரத் மாதாகி ஜே என்று சொல்லி பதவியேற்றுகொண்டார் ஓ.பி.ரவீந்திரநாத். அப்போதே அவர் பாதி பாஜக என்று நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டார்.
அதன்பிறகு, நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் எல்லா விவாதங்களிலும், பாஜக எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாகவும் அவற்றை நியாயப்படுத்தியும் பேசி வருகிறார்.
அண்மையில், ஒரூ விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எம்.பி ரவீந்திரநாத், காவி துண்டு அணிந்து கொண்டு 'முதலில் நான் ஒரு இந்து' என்று மதத்தை மையமாக வைத்துப் பேசியிருந்ததைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்தன.
அடுத்ததாக, அண்மையில் அரசமுறைபயணமாக 'நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்' என்றே பேசியுள்ளார். ரவீந்திரநாத்தின் இந்த மோடி பாசம் அவரது லெட்டர் பேட் வரை நீண்டிருக்கிறது.
தனது லெட்டர் பேடில் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார் எம்.பி ரவீந்திரநாத். அந்த கடிதத்தின் மேல் பகுதியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே இவரது செயல்கள் இப்படி இருக்கையில் தற்போது அதை மேலும் உறுதி செய்யும் விதமாக இந்த லெட்டர் பேட் நடவடிக்கை உள்ளது. மேலும் மோடி அதிமுக? உருவாகிறதா என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.