Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக தொண்டர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

டிசம்பர் 02, 2019 10:08

சென்னை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் மக்கள்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே அவர்களுக்கு திமுக தொண்டர்கள் நிவாரண உதவி செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் இறந்து போன துயரமும் அதிர்ச்சியுமான செய்தி நெஞ்சை உலுக்குகிறது. உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், அச்சம் ஏற்படுகிறது.

வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக, உரிய பருவத்தில் பெய்யக்கூடிய மழை இது என்பதால், அதனை உணர்ந்து முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டிருக்க வேண்டும். 

கடலூரில் 3000-க்கும் அதிகமான வீடுகள் மழை நீரில் மிதக்கின்றன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரங்களில் கடும் பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள். வாய்க்கால், ஓடை போன்றவை சரியாகத் தூர்வாரப்படாததால் இந்த நிலைமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக குழந்தைகள் - முதியோர் உள்ளிட்டோருக்கு காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

அனைத்துத்தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும். கவனக்குறைவும் அலட்சியமும் நீடித்தால், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட செயற்கைப் பெருவெள்ளத்தைப் போன்ற சூழலைத்தமிழகம் சந்திக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும். அந்த நிலை இனி ஒருக்காலத்திலும் உருவாகிவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 

அதுபோலவே, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேட்டுப்பாளையத்தில் வீடு இடிந்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்