Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

டிசம்பர் 05, 2019 08:09

சென்னை: பெண்களின் பாதுகாப்பிற்கு உயர் முக்கியத்துவம் தராமல், அதிலேயும் கூட புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க.
அரசின் அலட்சிய மனப்பான்மைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

‘கோவையில் 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட்டு வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாகியிருப்பதும், அதற்கு முன்பு ‘துடியலூர் சிறுமி
கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டி சிறுவள்ளூரில்
இளம்பெண்ணின் மர்ம மரணமும் தாய்மார்களை பெரும் பீதியடைய வைத்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க. அரசு உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துப் போக, காவல்துறையை அப்பட்டமாக
பயன்படுத்தியதன் விளைவாக, இன்றைக்கு மாநிலத்தில் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும்
பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாநகராட்சிகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் கொலை நகரங்களாக மாறி வருகின்ற நிலையில், அவை
பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற நகரங்களாக, பெண்களை பொறுத்த வரை ‘நரகங்களாக’ மாறி விட்டன என்பது மிகுந்த
வேதனைக்குரியது.

காந்தியடிகள் கண்ட ‘நள்ளிரவில்’ அல்ல இன்றைக்கு ‘பட்டப்பகலிலேயே கூட’ ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக நடந்து போக
முடியாத அளவிற்கு அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்து சூழ்ந்திருக்கிறது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், “ஸ்டாலின் அரசியல் செய்கிறார்” என்று விதண்டாவாதமாக முதல்-அமைச்சர் பேட்டியளிப்பார்.
ஆனால் பொறுப்புள்ள, பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அ.தி.மு.க. அரசின் தவறுகளை
ஊழல்களை அலட்சியங்களை, மக்கள் விரோதச் செயல்களை நான் சுட்டிக்காட்டிக் கொண்டு தான் இருப்பேன்.

எத்தனை பொய்கள் சொல்லி, அதன் மூலம் அரசியல் செய்தாலும், முதல்-அமைச்சர் தனது நிர்வாகத் திறமையின்மையை திசை திருப்ப
நினைத்தாலும், உண்மை நிலவரத்தை நான் மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுதான் இருப்பேன்; தயங்க மாட்டேன் என்று
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை, விருப்பு வெறுப்பின்றி, வேண்டியோர் வேண்டாதோர் என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல்,
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறேனும் உறுதி செய்ய வேண்டும் என்றும்
வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்