Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஐஐடி மாணவி மரணம்: பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல்

டிசம்பர் 07, 2019 06:04

சென்னை: சென்னை ஐஐடி இயக்குநருக்கும், பேராசிரியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் கடந்த மாதம் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது தற்கொலைக்கு காரணம் ஐஐடியைச் சேர்ந்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்களும் காரணம் என தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

செல்போனைக் கைப்பற்றி தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில் இந்த பதிவு மாணவி இறப்பிற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டதுதான் என அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேராசிரியர்களிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேராசிரியர்களை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. தற்போது ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு இது தொடர்பாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் மாணவியின் மரணத்துக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களும் மாணவியைப் போல் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஐஐடி இயக்குநருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்தக் கடிதம் தொடர்பாக ஐஐடி பதிவாளர் கோடூர்புரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்