![](admin/uploads/.6368b76755e026.79729404.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: வெங்காயத்திற்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடந்த ஒரு மாத காலமாகவே உலுக்கி எடுத்துவிட்டது வெங்காயத்தின் விலை. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கணிசமான அளவுக்கு தமிழகத்திலேயே பயிரிடப்படும். இந்த நிலையில் தமிழகத்துக்கு வெங்காயம் வழங்கும் மாநிலங்களில் பெய்த தொடர்மழையால் விளைச்சல் பாதித்து, வரத்து குறைந்தது. இதனால் மளமளவென உயரத் தொடங்கிய பெரிய வெங்காயத்தின் விலை, கிலோ 200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தன.இந்த நிலையில்தான் இனி வரும் காலங்களில் தமிழகத்துக்குத் தேவையான அளவு வெங்காயத்தை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கோடு சத்தமின்றி களமிறங்கி இருக்கிறது
தோட்டக்கலைத்துறை. அதன்படி தரமான வெங்காய விதைகளை விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானிய விலையில் வழங்கி, உற்பத்தியை ஊக்குவிக்கும் பணியை வெற்றிகரமாகத் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர் அதிகாரிகள்.
தோட்டக்கலைத்துறை. தமிழகத்தில் 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வரும் தோட்டக்கலைப் பயிர்களை 20 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு உயர்த்துவதே இலக்கு என்கிறார் தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன். இதுவரை தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யாத கிராமங்களிலும் கூட குறைந்தபட்சம் 25 ஏக்கர் பரப்பளவில் அவற்றை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விதைகளை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்குச் சென்று, அங்குள்ள உதவி தோட்டக்கலை அலுவலரை அணுகி விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் சுப்பையன். மேலும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்து விதைகளை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் அவர்.