![](admin/uploads/.5c8a2153ac65e9.76692028.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: 12 பேர் நீக்கப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகராட்சி நுண்ணுரம் செயலாக்க மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தினக்கூலி ரூ.380 அடிப்படையில் பணியாற்றி வரும் இவர்களுக்கு தற்போது கூலி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் 12 பேர் திடீர் என பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சுய உதவி குழு ஒப்புதல் இன்றி 15 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தகவல் அறிந்த துப்புரவு பணியாளர்கள் சி.ஐ.டி.யு. துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் பொன்மலை கோட்ட அலுவலகம் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் நீக்கப்பட்ட 12 துப்புரவு பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கவேண்டும். சுய உதவி குழு ஒப்புதல் இன்றி முறைகேடாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்நிலையில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஜெகநாதன் கோட்ட உதவி ஆணையர் தயாநிதி கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 2 பணியாளர்களுக்கு உடனடியாகவும் மீதம் உள்ள 10 பேருக்கு குழு விசாரணைக்கு பின்னர் வேலை வழங்குவது இனி முறைகேடாக பணி நியமனம் வழங்குவது இல்லை என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்ட அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.