Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: மத்திய பாரதீய ஜனதா கூட்டணி, அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இது, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014-ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக அப்பகுதிகளில் விமானப் போக்குவரத்து, பேருந்து, ரயில் சேவை எனப் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்தின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. பயணத்தைத் தவிர்க்குமாறும். அங்குள்ள சூழ்நிலைகள் பற்றிய தகவல்களுக்கு "உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்கவும் என வலியுறுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் (வாகா தவிர) பயணங்களை தவிர்க்கும்படி இங்கிலாந்து கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோல் பிரெஞ்சு மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களும் இந்தியாவில் பயணம் செய்யும் போது விழிப்புடன் இருக்குமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.