Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை சட்டத்திருத்தத்தை மீண்டும் திருத்துவோம்: அமித் ஷா

டிசம்பர் 15, 2019 07:42

புதுடெல்லி: தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துவிட்டதால் அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

இந்நிலையில், இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின் நடைபெறும் முதல் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களின் கவலையைப் போக்கும் வகையில் தேவைப்பட்டால் இந்தச் சட்டத்திருத்தத்திலேயே இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக் கூறியிருக்கிறார். 

சனிக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். கிரித் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஷா, "கொனார்டு சங்மா (மேகாலயா மாநில முதல்வர்) மற்றும் அவரது அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை என்னைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினர்.எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்தேன். 

சட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். நான் அவர்களை கிறிஸ்துமஸ் முடிந்ததும் சந்திப்பதாகக் கூறியிருக்கிறேன்." என்றார். மேலும், ஆக்கப்பூர்வமான விவாதத்தின் வழியாக இந்த விவகாரத்தில் மேகாலயாவின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என உறுதி அளித்திருப்பதாகவும் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தன்பாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "குரியுரிமை சட்டத்திருத்தத்தைத் தாக்கல் செய்தபோது காங்கிரஸுக்கு வயிற்றெரிச்சல் வந்துவிட்டது. மற்ற நாடுகளில் மத ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளான மக்கள் அகதிகள் போல வாழ்கிறார்கள். அவர்களும் ஒரு நாட்டின் குடிமக்களாக இருக்கக்கூடாதா? நாங்கள் முஸ்லிம்களின் விரோதிகள் என்று காங்கிரஸ் சொல்கிறது. நாங்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவந்ததும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டது காங்கிரஸ்தான்" என்று தெரிவித்தார். 

தலைப்புச்செய்திகள்