![](admin/uploads/.5e998834321fb8.30772969.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் பரவும் சூழல் ஏற்படுகிறது. இது முதலில் குழந்தைகளையே தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் சில இடங்களில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. எனவே ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அளித்து வருவது அவசியமாகிறது.
தமிழகத்தில் நடப்பாண்டில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்ததன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருகிலுள்ள பல்வேறு மாவட்ட மக்கள் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது அங்கு 195 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 26, கோவை 17, ஈரோடு 2 உள்ளிட்டோரும் அடங்கும்.
இவர்களில் 36 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காய்ச்சல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் நாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் அஷ்விகா(7). இவர்கள் கடந்த 5ஆம் தேதி காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு டெங்கு வார்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனின்றி நேற்று சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வசந்தன் மகள் மோனிஷா(5), மேலும் திருப்பூர் வளவாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த சர்வேஷ்(1) ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்ததா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.