![](admin/uploads/.5d1eec3559f985.79997072.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: டில்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் பேசிய துணை ஜனாதிபதி வெங்ககைய்ய நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஆதி காலம் முதல் பெண்களுக்கு மரியாதை அளிப்பது தான் நமது கலாச்சாரம். அனைத்து விதங்களிலும் பெண்களை முன்னிறுத்தி போற்றி வருகிறோம். சினிமா துறைகளிலும் பலர் சாதனை படைத்து வருகின்றனர். நதிகள், கல்விக் கடவுள் ஆகியவற்றிற்கும் பெண்களின் பெயர்களை வைத்து வழிபடுவது நமது கலாச்சாரம். பெண்களை மதிக்க வேண்டும் என இளைய சமுதாயத்திற்கு நாம் கற்றுத்தர வேண்டும். நமது நாட்டில் 50 சதவீதம் மக்கள்தொகை பெண்கள் உள்ளனர்.
நமது இடஒதுக்கீட்டை பற்றி பேசவில்லை. நமது கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டு வருவது தொடர்பாக பேசுகிறேன். இதில் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது துரதிருஷ்டவசமானது. இவற்றை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். தேவை புதிய சட்டம் அல்ல. சமுதாய மாற்றம், விழிப்புணர்வு தான்.
சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சினிமா வலிமை வாய்ந்த தொலைத்தொடர்பாக விளங்குகிறது. நமது கலாச்சார வலிமை மொழிகளில் உள்ளது. மொழியும், கலாச்சாரமும் நமது கண்கள். அவற்றை நாம் பாதுகாத்து, வளர்க்க வேண்டும். சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல, பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் வலிமை கொண்டது. இந்திய படங்கள் உலக அளவில் புகழ்பெற்றது. இந்திய கலாச்சாரம், சினிமா, உணவு ஆகியன தான் உலக அளவில் அதிகமானவர்களை கவர்ந்தது.
இன்றைய இளைய சமூகத்தினர் துரித உணவுகளை தேடு ஓடுகிறார்கள். துரித உணவு என்றாலே உடனடி மற்றும் நிலைத்த நோய் என்று அர்த்தம். உடல் ஆரோக்கியம் முக்கியம். யோகா உடலுக்கானது. மோடிக்கானது அல்ல. யோகா உடலுக்கானது மட்டுமல்ல மனதிற்கானதும் தான். பாகுபலி போன்ற படங்கள் இந்திய சினிமா அதீத தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன் கொண்டது என்பதை உலகிற்கு காட்டி உள்ளன. பெண்கள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு ஏற்படும் படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் மனதை அதிகம் ஈர்க்க கூடியது சினிமா. அதனால் மக்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல தகவல்களை கொண்டு சேர்ப்பதாக இருக்க வேண்டும். சமூகத்தை வடிவமைப்பதாகவும் சினிமா இருக்க வேண்டும்.
எத்தனை பிரச்னைகள் வந்தாலும் இந்தியா ஒன்று தான். எந்த மதம், மொழி சார்ந்தவராக இருந்தாலும் ஒற்றுமையை கடைப்பிடித்து, நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும். அது தான் உண்மையான தேசப்பற்று. பல பிரச்னைகளில் உடனடி நீதி வழங்கி முடியாது. அதே சமயம் அரசியலமைப்பில் தாமதிக்கவும் கூடாது. இது நமது நாடு. இதில் வன்முறை, பலாத்காரம் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் ஒழுக்கம், கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
குழந்தை, குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படம் தான் உண்மையான படம் என்பது எனது கருத்து. இது சென்சார் அல்ல. நமது அறிவு சார்ந்தது. அதை இழந்து விட்டால் மக்களின் அபிமானத்தை இழந்து விடுவோம். அனைவருக்கும் சமூக அக்கறை வேண்டும் என்று கூறினார்.