Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் 134-வது ஆண்டு தினம் கொண்டாட்டம்

டிசம்பர் 28, 2019 08:51

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 134-வது நிறுவன தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதுபோல மாநில தலைநகரங்களிலும் இன்று 134-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதையொட்டி முக்கிய நகரங்களில் எதிர்ப்பு பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது.

அதன்படி அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பிரியங்காகாந்தி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கேரளாவில் நடக்கும் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொள்கிறார். அரசியல் சட்டத்தை காப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதுதவிர நாட்டின் பல்வேறு பகுதியில் இன்று காங்கிரஸ் சார்பில் அமைதிப்பேரணி நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி இந்த பேரணிகள் நடத்தப்படுகின்றன. இதனால் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியுடன் காணப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்