Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு இந்த வாரம் வழங்கப்படலாம்

டிசம்பர் 29, 2019 07:33

சென்னை, டிச.30: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு மாதத்துக்கு முன்பே தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகளை கொள்முதல் செய்ய அரசு
தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது. அதன்படி ரே‌‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவைகளை பாக்கெட்டு போடும் பணி வேகமாக நடைபெற்று இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கப் பணம் ரூ.1000த்தை இரண்டு 500 ரூபாய் தாள்கள் வீதம் வழங்குவதற்கு ஏதுவாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு வந்ததும் ஒவ்வொரு ரே‌‌ஷன் கடைகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட உள்ளது. அநேகமாக பொங்கல் தொகுப்பு பரிசுகளை வருகிற 5-ந் தேதி முதல் வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இன்றி முறையாக பொங்கல் பரிசு தொகுப்பை பெற 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில் சுழற்சி முறையில், தெருக்கள் அல்லது பகுதி வாரியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தெருக்களுக்கு எப்போது பணம் பொருள் வழங்கப்படும் என்ற பட்டியலை ரே‌‌ஷன் கடைகளில் எழுதி ஒட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரே‌‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதும் பயனாளிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும்.

தலைப்புச்செய்திகள்