Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவனந்தபுரம்: உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாது என கேரள அரசு தெரிவித்ததை அடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்தார்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இதையொட்டி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். நேற்று புத்தாண்டு என்பதால் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் இருந்து கேரள அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தரிசனத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு ஜனாதிபதியை அழைத்து செல்வது குறித்து கேரள அரசு ஆலோசித்தது. கடந்த 1973ல் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி தான் முதன்முதலாக சபரிமலையில் தரிசனம் செய்தார். அதன்பிறகு சபரிமலை வர உள்ள 2வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்காக பாண்டி தாவளத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் ஹெலிபேட் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில் பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை தலைவர் அந்த மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பூஜை செய்வதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஹெலிபேட் அமைப்பதற்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு சபரிமலை சென்றது. அப்போது ஹெலிபேட் அமைக்கும் அளவுக்கு நீர்த்தேக்க தொட்டி பலமானதாக இல்லை என்பது கண்டறியப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர், எஸ்பி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், தற்போது மகர விளக்கு காலம் நடந்து வருவதால் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.இது பற்றி ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை கேரள அரசுக்கு தகவல் அளித்தது. அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் சுற்று பயணமும் மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி 6ம் தேதி கொச்சி வரும் அவர் அன்று லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கிருந்து 9ம் தேதி திரும்பி வந்து கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.