![](admin/uploads/.5ed5f8e1db4f50.10107775.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் சேகரிக்கப்படும் மறுபயன்பாட்டு பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்று திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி பெசன்ட்நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் மறுபயன்பாட்டு பொருட்கள் சந்தை நேற்று மதியம் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை நடைபெற உள்ளது.
இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக் கூடிய பழைய பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். புத்தகங்கள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், மின்னணு பொருட்கள், மரச் சாமான்கள், பொம்மைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், குடை, மழை கோட், பைகள், சூட்கேஸ், சைக்கிள், செயற்கை ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், எலக்ட்ரானிகள் பொருட்கள், பர்னிச்சர்களை விற்பனைக்கு வைத்தனர்.
இந்த சந்தையில் பயன்படுத்த தகுந்த பிரிட்ஜ் ரூ.200-க்கும், மைக்ரோ ஓவன் ரூ.100-க்கும், சோபா செட் ரூ.100-க்கும், சிறுவர் சைக்கிள் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆடைகள் ரூ.10-க்கும், காலணி ரூ.10-க்கும், ஷு ரூ.20-க்கும் விளையாட்டு பொருட்கள் ரூ.10-க்கும் விற்கப்பட்டன.
இந்த சந்தையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை நன்கொடையாகவும் வழங்கலாம். இன்று மாலை 6 மணி வரை இந்த சந்தை நடக்கிறது. இந்த பழைய பொருட்கள் சந்தை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.