Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜ.,விடம் இருந்து விலக நேரம் பார்க்கிறோம்: அமைச்சர் பாஸ்கரன்

ஜனவரி 22, 2020 07:21

சிவகங்கை: பாஜ.,விடம் இருந்து விலகுவதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறோம் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால், பாஜ., உடனான கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பாஸ்கரன் பேசியதாவது: பாஜ.,விடம் இருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.

இளையான்குடியில் திமுக கட்சியினரே ஆளுங்கட்சியினர் போல் நடந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சாதாரண மனிதர்கள்; நீங்கள் எங்களை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். எம்எல்ஏ, சேர்மன் மற்றும் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம். 

ஆனால், காங்கிரசையும் திமுகவையும் இதுபோல கேட்க முடியுமா, சந்திக்க முடியுமா, எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா. பாஜ.,வை வேண்டாம் என ஒதுக்கினாலும் நீங்கள் திமுகவிற்கு தான் ஓட்டுபோடுவீர்கள். இவ்வாறு பாஸ்கரன் பேசினார்.

தலைப்புச்செய்திகள்