Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முக்கிய நபர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக அரசுப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மோசடி நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய பலர் தரவரிசை பட்டியலில் அதிக இடம்பிடித்திருந்தது தெரியவந்தது.
இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் உதவியை டிஎன்பிஎஸ்சி நாடியது. இதையடுத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதில் 99 தேர்வர்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்து கிரிமினல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
இரண்டு வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், இடைத்தரகர் ராஜசேகர், தேர்வு எழுதிய நிதிஷ்குமார், நெல்லை ஐயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவர் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குரூப் 4 முறைகேடு விசாரணை விறுவிறுப்பு அடைந்துள்ளது.