Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நானும் ஒரு தீவிரவாதி: சீமான் கருத்து

ஜனவரி 29, 2020 07:29

மதுரை: கருத்தை, கொள்கையை மக்களிடத்தில் தீவிரமாக கொண்டு சேர்ப்பதால், நானும் ஒரு தீவிரவாதி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பழனிபாபா நினைவேந்தல் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று(ஜன.,28) நடந்தது.

இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. ரஜினி நடித்த அத்தனை படங்களும் வன்முறை படங்கள். ஆனால், வன்முறை எதற்கும் தீர்வாகாது என ரஜினி புத்தி சொல்கிறார். துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளி என சொல்லும் ரஜினி, மண்சோறு சாப்பிடும் தனது ரசிகர்களுக்கு அறிவு தர துக்ளக் வாங்கி கொடுக்கட்டும். தூத்துக்குடி போராட்ட களத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பேசிய ரஜினி, குடியுரிமை சட்டம் குறித்து கேட்டால் பதில் இல்லை.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான். காங்கிரஸ் ஆட்சியின் போது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்ட போது திமுக ஆதரவு தெரிவித்தது. பா.ஜ.,வுக்கு எதிரானது திமுக என இன்னும் மக்கள் நம்பி கொண்டுள்ளனர். எச்.ராஜாவை வெற்றி பெற வைத்தவர்கள் திமுகவினர்.

பழனிபாபாவை, தீவிரவாதி என சொல்லக்கூடாது. அவரை தீவிரவாதி என ஏற்கக்கூடாது. பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ரெண்டிற்கும் வெவ்வெறு பொருள். வெவ்வேறு சொற்கள். ஒன்றாக கருதக்கூடாது.பழனிபாபா, ஒரு தீவரவாதி என்றால், சீமானும் தீவிரவாதிதான். ஏனென்றால், நாங்கள் எங்கள் கருத்தை கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்போம். பழனிபாபாவை கருத்தால், வீழ்த்தி இருந்தால், அது தீவிரவாதம். ஆனால், கருத்தால், வெல்ல முடியாமல், கத்தியால் வெட்டி வீழ்த்திய செயல்தான் பயங்கரவாத செயல். 

இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்