Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை துறைமுகத்தில் மருத்துவக் கழிவுகளுடன் சீனக் கப்பல்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் எதிர்ப்பு

ஜனவரி 30, 2020 12:03

சென்னை: சென்னை துறைமுகத்தில் மருத்துவக் கழிவுகளுடன் வந்திருக்கும் சீனக் கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் சீனா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 

சீனா, தைவான் உள்ளிட்ட இன்னும் சில நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், மும்பையில் கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 8 பேர் அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. சென்னை விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழக உயர்மட்டக் குழு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. அந்தக் கூட்டத்தில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவுகளுடன் துறைமுகத்துக்கு வந்துள்ள  கப்பலை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், ஒருவேளை கப்பலை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, சென்னை துறைமுகத்தில் இருந்து சீனா கப்பலை திருப்பி அனுப்ப சென்னை துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்