Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக தேடப்பட்டுவரும் இடைத்ததரகர் ஜெயகுமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குரூப்- 4 தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக எழுந்த சூழ்நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட இரண்டு முக்கிய இடைத்தரகர்கள் ஜெயக்க்குமார் மற்றும் காவலர் சித்தாண்டி இருவரையும் சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.
இதில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் சிக்கினால் குரூப்-4 தேர்வு முறைகேடு பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுவரை ஜெயக்குமார் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் முகப்பேரில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீஸார் 10 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
சோதனையில் லேப்டாப், முக்கிய ஆவணங்கள், பென்ட்ரைவ் உள்ளிட்ட முக்கிய தடயங்களை பறிமுதல் செய்தனர். ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீஸார் தேடிவரும் நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயக்குமார் பற்றிய தகவலோ, அவர் இருக்குமிடம் குறித்த தகவலையோ பொதுமக்கள் அளிக்கலாம் அவ்வாறு அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்து செல்போன் எண்களையும் அளித்துள்ளனர்.
9940269998, 9443884395, 9940190030,9498105810,9444156386 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.