Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் நிலாச்சோறு திருவிழா: கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்!

பிப்ரவரி 12, 2020 06:45

கோவை: தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை ஆவராம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தமிழ் பண்பாட்டு கலாச்சார மையம் எனும் அமைப்பை உருவாக்கி, தமிழர் பாரம்பரிய பண்டிகைகளை பழமை மாறாமல் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத்துக்கு 7 நாள்கள் முன்பாகவே நிலவுக்கு மரியாதை செய்யும் வகையில், ''மன மகிழ் கும்மி விழா'' என்ற ''நிலாச்சோறு நிறைவு திருவிழா'' நடைபெற்றது. இதில், ஆவராம்பாளையம் துரைசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி நிலாச்சோறு திருவிழாவை நடத்தினர். மேலும், விடிய விடிய கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது: இந்த திருவிழா பாரம்பரியமாக கிராமப் பகுதிகளில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது நகர்ப்புறங்களில் இளைய தலைமுறை குழந்தைகள் நமது தமிழர் பாரம்பரிய விழாக்களை அறிந்து கொள்ளும் விதமாக இதனை இங்கு கொண்டாடுகிறோம்.

இவ்வாறு செய்வதன் மூலம் விவசாயம் செழிக்கும், மும்மாரி மழை பெய்யும் என்பது ஐதீகம். ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் பகுதியில் உள்ள அனைவரும் இணைந்து இந்த நிலாச்சோறு விழாவை நடத்தினோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்