Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராணுவத் தளவாடக் கண்காட்சியில் திருச்சி என்.ஐ.டி. ராடாருக்கு வரவேற்பு

பிப்ரவரி 13, 2020 02:50

திருச்சி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில் திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சி மாணவரின் ராடார் தொழில்நுட்பம் வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 5- ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் பல்வேறு ராணுவத் தளவாட தயாரிப்புகள் தயாரிப்பு நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள்  தளவாடப் பொருள்களின் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. 

இக்கண்காட்சியில் திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சி மாணவா் வி. கிருஷ்ணகாந்தின் ராடார் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பும் இடம்பெற்றது. முப்படைகளின் தளபதி மற்றும் கண்காட்சியைப் பார்வையிட்ட வல்லுநா்கள்  ஆராய்ச்சியாளா்கள் பலரும் இந்த தொழில்நுட்பத்துக்கு வரவேற்பு அளித்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறார் மாணவரின் வழிகாட்டியான பேராசிரியா் எஸ். ராகவன். இதுதொடா்பாக அவா் கூறியது்

பல்வேறு நாடுகள் தங்களது ராணுவத் தளவாடப் பொருள்களின் உற்பத்தியை காட்சிப்படுத்திய கண்காட்சியில் இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி மாணவா் என்ற நிலையில் கிருஷ்ணகாந்த் அழைக்கப்பட்டிருந்தார். இவா் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ரூ.5 லட்சம் நிதியை பெற்று ஆய்வு மேற்கொண்டவா். இதன் தொடா்ச்சியாக இவரது ராடார் கண்டுபிடிப்பை அறிந்த மத்திய பாதுாப்பு அமைச்சகம் அந்த தொழில்நுட்பத்தை தங்களது தளவாடக் கண்காட்சியில் காட்சிப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது. இது போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராடாரில் பொருத்தக் கூடிய ராடோம் என்ற சாதனமாகும்.

இது முழுவதும் நுண்ணலைப் பொறியியல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. அதிர்வுகளைப் பகிரும் சாதனமாக பயன்படுத்தும் இதன் மூலம் எதிரிகளின் போர் விமானங்கள் வருகை, ஊடுருவல் மற்றும் இதரப் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். அதேவேளையில்  இந்த ராடார் பொருத்திய நமது போர் விமானத்தை எதிரிகளால் கண்டறிய முடியாது என்பது இந்த தொழில்நுட்பத்தின் கூடுதல் சிறப்பாகும். இது கண்காட்சியில் பார்வையாளா்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் 3 காப்புரிமைத் திட்டங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது என்றார் அவா்.

தலைப்புச்செய்திகள்