Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி ஆற்றில் இருந்து ரெயில் நிலையத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல மீண்டும் எதிர்ப்பு

பிப்ரவரி 19, 2020 01:02

திருச்சி: சிறுகமணி காவிரி ஆற்றில் இருந்து ரெயில் நிலையத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி செயல் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. திருச்சி மாவட்ட விவசாயிகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. இந்த ஆற்றில் திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை முதல் கம்பரசம்பேட்டை வரை பல கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும்  சிறுகமணி காவிரி ஆற்றில் இருந்து திருச்சி ரெயில் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. அப்போது  அந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது காவிரி ஆறு வறண்டு காணப்படும் நிலையில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் மீண்டும் திருச்சி ரெயில் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகளுக்காக சிறுகமணி சமுதாய கூடத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவிரி மீட்பு குழுவினர் பொன்வயல் உழவர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்தனர். ஆனால்  கூட்டம் அங்கு நடைபெறவில்லை ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது என்று தெரிவித்தனர். 

இதனால் அங்கு வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். பின்னர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பேரூராட்சி செயல் அதிகாரியிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து விட்டு சென்றனர்.

தலைப்புச்செய்திகள்