Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை மருந்து தட்டுப்பாடு ஏற்படவில்லை - விஜயபாஸ்கர்

மார்ச் 01, 2020 03:50

புதுக்கோட்டை: சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வி‌ஷக்கடி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சையில் ரூ.5 கோடி மதிப்பில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. சென்னையை அடுத்து மதுரையில் கல்லீரல் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் எலி பேஸ்ட்டால் பலர் பாதிக்கப்படும் நிலையில், மற்ற துறையுடன் கலந்து பேசி அதை தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து தினமும் கேட்டறிந்து வருகிறோம்.  கொரோனா வைரஸ் புதிதாக பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகிறோம்.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் தரக் குறைவாக பேசும் காவலர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்