Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் வேடத்தில் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் யார்? என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தர்ணா

மார்ச் 03, 2020 08:40

திருச்சி: பெண் வேடமிட்டு விடுதிக்குள் புகுந்து மடிக்கணினி செல்போன்களை திருடிய மர்ம நபர் யார் என்பத குறித்து விசாரிக்க வலியுறுத்தி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி சிறுகனூர் அருகே எம்.ஏ.எம்.என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு  உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் அறை ஒன்றில் 18 செல்போன்களும்  6 மடிக்கணினிகளும் திருட்டு போயின.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் கூறினர். கல்லூரி நிர்வாகம் அப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் பெண் வேடமிட்ட ஒரு மர்ம நபர் மாணவிகள் விடுதிக்குள் சென்றது தெரிய வந்தது. அந்த நபர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை ஊருக்கு செல்லுமாறும்  மீண்டும் அழைக்கும் போது வந்தால் போதும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில்  மாணவிகள் அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி திறக்கப்பட்டது. அப்போது வெளியூர் சென்றிருந்த மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும்  மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபரை கைது செய்யக்கோரியும்  திருட்டு போன மடிக்கணினிகள்  செல்போன்களை மீட்டுத் தரக்கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். திருட்டுப்போன மடிக்கணினிகள் மற்றும் செல்போன்கள் மீட்டுத் தரப்படும். விடுதிக்குள் பெண் வேடமிட்டு நுழைந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்