![](admin/uploads/.5d540859a2a6d9.80898800.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கரூர்: தமிழக மக்களின் ஆதரவு எப்பவுமே மு.க.ஸ்டாலி னுக்கு தான் என்று கரு்ரில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதமாக பேசினார்.
கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கரூர் சி.எஸ்.ஐ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிதாக சேர்ந்த தி.மு.க. இளைஞரணியினருக்கு அடையாள அட்டையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் கருணாநிதியின் பேரன் என்பதை விட எனக்கு மாநில இளைஞரணி செயலாளர் பதவி பெரியதல்ல. எப்போதும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரில் ஒருவராக இருந்தே நான் செயலாற்ற விரும்புகிறேன். என்னை பிரித்து பார்க்காமல் இளைஞரணியினர் தான் ஒருங்கிணைந்து எனக்கு வழிகாட்ட வேண்டும். 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தோம். அதில் 25 லட்சம் சேர்ந்து விட்டதை தலைவர் ஸ்டாலினிடம் கூறினேன். அப்போது அவர் பாராட்டு தெரிவிக்கவில்லை. மாறாக 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.
அதனை நோக்கி நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 42 ஆயிரம் பேர் இளைஞரணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும். இளைஞரணி என்பது அரசியலுக்கானது மட்டும் அல்ல. மாறாக சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது குளம் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாப்பது மரக்கன்று நடுவது போன்ற சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முதல் கட்ட போராட்டத்தை இளைஞரணி முன்னெடுத்து சென்றது. தற்போது டெல்லியில் அமைதியாக போராடியவர்கள் மத்தியில் வன்முறை வெடித்து 50 பேர் இறந்து உள்ளனர். இதற்கு பிரதமர் மோடி ஒரு சின்ன வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.
பிரதமர் என்கிற அடிப்படையில் இந்தியாவையே மோடி கட்டுக்குள் வைத்திருந்தாலும் தமிழ மக்களின் ஆதரவு எப்பவுமே மு.க.ஸ்டாலி;னுக்கு தான். இதே எழுச்சியுடன் இளைஞரணியினர் இருந்து வருகிற 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானதும் மக்களின் தேவையை உணர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வார். இரவு பகலாக படித்து அரசு வேலைக்கு சென்றால் வாழ்வு கிடைக்கும் என பலர் தேர்வு எழுதி வருகின்றனர்.
ஆனால் தற்போது டி.என்.பி.எஸ்.சி. போட்டிதேர்வு முறைகேடு அம்பலமாகியுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. கரூரில் நடந்த அட்டூழியத்தால் வெற்றி பறிபோயிருக்கிறது. இதற்காக துவண்டு விட வேண்டாம். சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.