Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மார்ச் 09, 2020 04:26

தஞ்சை: தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சகோதரிகள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதில் மனு கொடுப்பதற்காக பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர் மேலக் குளக்கரையைச் சேர்ந்த சம்பத் மனைவி சிவப்பிரியா (38) தனது தாய் முத்துலட்சுமி (58)  தங்கை தனலட்சுமி (35) உள்ளிட்டோருடன் வந்தார்.

ஆட்சியரக நுழைவுவாயிலில் சென்றபோது சிவப்பிரியா  தான் கொண்டு வந்த பாட்டிலிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும் அருகில் இருந்த தனலட்சுமி மீதும் மண்ணெண்ணையை ஊற்றினார். இதைப் பார்த்த போலீசார் இருவரையும் மீட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்  சிவப்பிரியா மகன் பாலாஜியை அதே பகுதியில் சிலர் பிப்ரவரி 22ம் தேதி தாக்கியதாகவும்  அது தொடர்பாக மெலட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும்  அதனால் விரக்தி அடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்