Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியா வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
புதுதில்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்தும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் என்பிஆர் என்ஆர்சி-க்கு எதிராகவும் திருச்சியில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னூர் உழவர்சந்தையில் திருச்சி ஷாஹின் பாக் என்ற அமைப்பை உருவாக்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிற்பகல் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.
உழவர்சந்தையிலிருந்து தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள் பெண்கள் சிறார்கள் முதியோர் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நடந்தே ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து சாலையில் அமர்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். தவலறிந்து வந்த ஆட்சியர் சு. சிவராசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் ஆட்சியரகம் அருகே 2 மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.