![](admin/uploads/.5e7ef4ba992e52.82826215.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னையில் இன்று காலைமுதலே ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பிரதமர் மோடி இன்று ஒருநாள், மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் ஊரடங்கை சென்னை மக்கள் இன்று கடைப்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதலே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சென்னையில் தேன்கூட்டில் எப்போதும் கூட்டமாக காணப்படும் சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மெரினா கடற்கரை, பாரிமுனை, பூக்கடை, எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சாலை, தி.நகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் யுத்தகளம் போல் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பொதுவாக சட்டம்-ஒழுங்கைக் காக்கவே ஊரடங்கு உத்தரவு போடப்படும். முதன்முறையாக சமுதாயத்தைக் காக்க சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிரது. உத்தரவாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும். ஆனால், வேண்டுகோளாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 130 கோடி மக்களால் கடைப்பிடிக்கப்படுவது இன்றுதான்.
ஊரடங்கு உத்தரவை கலவரக்காரர்கள் மீறுவது வழக்கம். ஆனால் மக்கள் ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று மக்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதை தேசம் முதன் முறையாகப் பார்க்கிறது. சென்னையிலும் அதன் வீச்சைக் காண முடிந்தது.
இதற்குமுன் பல நிகழ்வுகளை சென்னை சந்தித்துள்ளது, ஆனாலும் இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல் முறை. 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்ட ஓரிரு நாளில் போக்குவரத்து இன்றி சென்னை சாலைகள் வெறிச்சோடின. சென்னையே வெறிச்சோடி காணப்படுகிறது.