Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வார்டில் சிகிக்சையளித்த மருத்துவர் வைரஸ் அறிகுறியுடன் சிறப்பு வார்டில் அனுமதி

மார்ச் 28, 2020 12:29

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உயிர் பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் சிகிச்சை அளித்தாலும் இந்த வைரஸின் வீரியம் அதிக அளவில் உயர்ந்துள்ளது. எனவே, சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் இந்நோயின் தொற்று ஏற்பட்டு, அதனால் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. திருச்சி கிஆபெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இருமல், சளி, காய்ச்சல் ஆகியவற்றுடன் திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர் ஒருவர் தொடர் சிகிச்சை அளித்து வந்தார்.
மேலும், அந்த இளைஞரை தொடர் கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்திருந்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மருத்துவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்