Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘தப்லிக் ஜமாத்’ கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா: தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தீவிரம்

ஏப்ரல் 01, 2020 05:36

சென்னை: தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

டில்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், நிஜாமுதீன் என்ற இடத்தில், கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். தப்லிக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ‘கொரானா அபாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் கூடும் அளவுக்கு, யாரும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது’ என, டில்லி போலீசார், ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லி, நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள, ‘மார்கஸ் நிஜாமுதீன்’ என்ற, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தான், இந்த பிரசங்க கூட்டம் நடந்துள்ளது.

கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், இந்த கட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர். விமானம், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும், மீண்டும் மார்கஸ் நிஜாமுதீன் கட்டடத்திற்கே திரும்ப வந்து தங்கினர். வெளியுலகத்திற்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாமல் இருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியவர்களில் ஆறு பேரும், ஸ்ரீநகர் திரும்பிய ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளது, அந்த மாநில மற்றும் நிர்வாக அரசுகளுக்கு தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் தான், கூட்டம் நடந்த இடத்தில், டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, டில்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவர்கள் பல குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில்தான்,  அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அந்த கட்டடத்துக்கு, ‘சீல்’ வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரது முகவரிகளும் பெறப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள், விமானம், பஸ், ரயில் உள்ளிட்டவற்றில், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கலாம் என்பதால், அவர்களுடன் யார் யார் பயணம் செய்தனர், அவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படலாம் என்பதால், டில்லி மத கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களை, உள்ளாட்சி மற்றும் வருவாய் நிர்வாகத்தினருடன் சேர்ந்து, நாடு முழுதும், அந்தந்த மாநில போலீசார், சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்