Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு பணி: கொளத்தூரில் களமிறங்கிய ஸ்டாலின்

ஏப்ரல் 03, 2020 09:32

சென்னை: சென்னை கொளத்தூரில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று காலையில் இருந்து மக்களுக்கு நிதி உதவிகளையும் மற்ற பல உதவிகளையும் வழங்கினார். 

கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே தமிழகம் முழுக்க அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க இப்படி பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு தி.மு.க. செயலாளர்கள், தொண்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தீவிரமாக உதவி செய்து வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் நேற்று தன்னுடைய  கொளத்தூர் தொகுதிக்கு சென்று அவர் மக்களை சந்தித்தார். அங்கு சமூக விலகல் எப்படி கடைபிடிக்கப்படுகிறது என்று ஆய்வு செய்தார். காய்கறி கடைகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ள கடைகளுக்கு சென்று அன்றாட பொருட்களின் விலை என்ன என்று மக்களிடம் கேட்டறிந்தார். தினசரி கூலி வேலை பார்க்கும் மக்களிடம் சென்று, அவர்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது, எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளது என்று விசாரித்தார்.

தனது தொகுதியில் முடங்கி இருக்கும் வெளி மாநில ஊழியர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து உதவினார். அவர்களுக்கு போர்வைகள், பழங்கள், காய்கறிகள் கொடுத்தார். தங்க இடம் இல்லாதவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். அதேபோல் வீடு இல்லாமல் சாலையில் தங்கி இருக்கும் மக்களுக்கும், குடிசைகளில் இருக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் போர்வைகளை வழங்கினார்.

இந்த முடக்கம் காரணமாக சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் தனது தொகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லோருக்கும் 500 ரூபாய் நிதி உதவியை ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுக்கு தினசரி தேவைகளுக்கான காய்கறிகளை வழங்கினார். அவர்களின் அன்றாட பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.

அதேபோல் சென்னையில் தூய்மை பணியாளர்கள் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். கடந்த ஏழு நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு கொளத்தூரில் ஸ்டாலின்தான் உதவி வருகிறார். அவர்களுக்கு ஸ்டாலின் மூலம்தான் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று தூய்மை பணியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்களுக்கு மாஸ்க் , கையுறை, புதிய ஆடைகள் கொடுத்து உதவினார்.

அதோடு சென்னையில் தனது தொகுதியில் இருக்கும் போலீசாரையும் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு பல பைகளில் மாஸ்குகளை வழங்கினார். நீங்கள்தான் அதிகமாக வெளியே உள்ளீர்கள். ஒரே மாஸ்க்கை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. அதனால் இதை வைத்துக் கொள்ளுங்கள். உதவி தேவைப்பட்டால் தகவல் தெரிவியுங்கள் என்று கூறினார். அவர்களுக்கு கை கழுவும் கிருமி நாசினிகளை வழங்கினார்.

தனது தொகுதியில் பல மக்களுக்கு கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும், நிதி உதவிகளையும், தேவையான உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் ஸ்டாலின் வழங்கினார். ஒருவரை ஒருவர் தொடாமல், சமுக விலகலை கடைபிடித்து ஸ்டாலின் இந்த உணவு பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்