Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குட்டிக்கரணம் போடச்சொல்லி குரங்காட்டம் நடத்துகிறார்: பிரதமர் மோடி மீது திருமாவளவன் பாய்ச்சல்

ஏப்ரல் 04, 2020 03:46

சென்னை: “கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி பிரதமர் மோடி ‘குரங்காட்டம்‘ நடத்துகிறார் என்றும் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டால் தான் உண்டு,” என்றும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தீபம் ஏற்றுவோம் அறிவிப்புக்கு ஏராளமான தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் அறிவிப்பு குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதுமான முழு அடைப்பு பத்து நாட்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் ஏதோ அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்றதும் முக்கியமான செய்திகள் அதில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருந்தனர். ஆனால், ஏப்ரல் 5 ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு ‘டார்ச் லைட்டை’ அடியுங்கள் என்று பிரதமர் அறிவிப்பு செய்துள்ளார். 

இந்த அறிவிப்பால் கொரோனா தொற்றிலிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா? 21 நாள் அடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும்.

பிரதமரின் வீடியோ அறிவிப்பு வெளியாகப் போகிறது என்றவுடன் நேற்று காணொலிக் காட்சியின் மூலமாக ஒவ்வொரு மாநில முதல்வரும் தமது மாநிலத்துக்குத் தேவையான உதவிகளை பிரதமரிடம் கேட்டார்கள். அது தொடர்பாக அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாடெங்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டுள்ளனர். அது தொடர்பாக ஏதேனும் அறிவிப்பை செய்வார் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது.

மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்புக் கருவிகள் இல்லை. சோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தத் தேவையான உபகரணங்கள் இல்லை. அதைப்பற்றி ஏதேனும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவை எதைப் பற்றியும் பேசாமல் ஒன்பது மணிக்கு 9 நிமிடங்கள் “மின் விளக்கை அணையுங்கள், டார்ச் அடியுங்கள்” என்று அறிவித்திருப்பது பிரதமர் இந்த நாட்டில்தான் இருக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் மாய உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறாரா என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

கொரோனாவின் பெயரால் குடிமக்களை குட்டிக்கரணம் போடச்சொல்லி ‘குரங்காட்டம்‘ நடத்துகிறார். மக்கள் மீதான அக்கறையோ, பிரதமர் என்ற பொறுப்போ அதில் வெளிப்படவில்லை. மக்களைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாத, நாட்டைப் பற்றி கவலையே படாத ஒருவரின் அறிவிப்பாகத்தான் இது இருக்கிறது.
இவ்வாறு வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்