Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததால் சிலருக்கு என் மீது ஆத்திரம்: மோடி

ஜனவரி 19, 2019 12:25

சில்வாசா: இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி-யின் தலைநகரான சில்வாசா நகரம் பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ள 100 நகரங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில்வாசா நகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- 
 
மத்தியில் முன்னர் ஆட்சி நடத்திய அரசு 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வெறும் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டித்தந்தது. ஆனால், எங்கள் தலைமையிலான அரசு ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டியுள்ளது. 

ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணம் கொள்ளயடிக்கப்படுவதை நான் தடுத்ததால் அவர்கள் என்மீது கோபமடைந்துள்ளனர். அதனால், அவர்கள் அனைவரும் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை அமைத்துள்ளனர். 

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தவர்கள் இன்று ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாக பேசுகிறார்கள். இந்த கூட்டணி மோடிக்கு எதிரானது அல்ல, இந்திய மக்களுக்கு எதிரானது. ஒழுங்காக ஒன்று சேர்வதற்குள்ளாகவே தங்களுக்கான பங்கு என்ன? என்ற பேரத்தில் அவர்கள் இறங்கி விட்டனர். 

மேற்கு வங்காளம் மாநில சட்டசபையில் ஒரேயொரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. மட்டுமே இருக்கும் நிலையில் அவர்கள் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்