Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக பள்ளிவாசல்களில் தொழுகை வேண்டாம்: முஸ்லீம் அமைப்புகள் கூட்டமைப்பு வேண்டுகோள்

ஏப்ரல் 06, 2020 10:33

சென்னை: “தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டும்,” என்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் முஸ்லீம் அமைப்புகள் கூட்டமைப்பு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் ஜமாஅத்துல் உலமா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர்  உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர். 

ஆலோசனைக்கு பிறகு இந்த இயக்கங்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா நோய்க்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா அவசர நிலையில் முழு அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா தொடர்பாக தமிழக அரசு நல்வாழ்வு துறையின் சார்பாக வீடுதோறும் நடைபெறும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வலியுறுத்துகிறது. கொரோனா நோய் குறித்து சமூக வளைத்தளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது அல்ல.

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விட்டனர். இதில் கொரோனா தொற்று உள்ளது என்று பரிசோதனையில் அறியப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உட்படுத்தி வருகின்றனர். இதே போல், அரசு மருத்துவமனைகளில் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது பெண்களுக்கு மிக பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்