Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு முடிந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மோடி அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

ஏப்ரல் 07, 2020 06:41

சென்னை: “ஊரடங்கு முடிந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மே, ஜூன் மாதங்களில் தான் கொரோனா தொற்று பெருமளவில் இந்தியாவில் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, ஏப்ரல் 14க்குப் பிறகு இயல்பு வாழ்க்கை முழுவதும் திரும்புமா? அல்லது மேலும் இந்த தடை நீட்டிக்கப்படுமா? என்பதைப்பற்றியெல்லாம் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பிரதமர் தலைமையில் நடத்தப்படவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதைப் பற்றி விரிவாக விவாதித்து, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலானதொரு செயல்திட்டத்தை வரையறுக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு 16 லட்சம் டெஸ்டிங் உபகரணங்களும், 50,000 வெண்டிலேட்டர்களும், 27 லட்சம் ‘என்- 95’ முகக் கவசங்களும் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போதே வெண்டிலேட்டர்கள் மற்றும் முகக் கவசங்களின் பற்றாக்குறை ஆங்காங்கே வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

36 ஆயிரம் வெண்டிலேட்டர்களை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற செய்திகள் வந்தாலும் அவை எப்போது கிடைக்கும் என்பதைப்பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை. சமூகப்பரவல் என்ற மூன்றாவது கட்டத்தை இந்த தொற்று எட்டுமேயானால் அதை சமாளிப்பதற்கு எவ்வித தயாரிப்பும் இல்லாத நிலையிலேயே மத்திய, மாநில அரசுகளும் இருக்கின்றன. இது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

தடை காலம் நீட்டிக்கப்படுமானால் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்யாவசிய பொருள்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதை சமாளிப்பதற்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும். அதேபோல், தேர்வுகள் குறித்து மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
 
ஏப்ரல்14 க்குப் பிறகு உடனடியாக பொதுப்போக்குவரத்து துவக்கப்படுமா? பேருந்துகள் இயக்கப்படுமா? என்பது மக்களிடையே எழுந்துள்ள கேள்வியாகும். எனவே, அதைப் பற்றியும் பிரதமர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமரே இப்போது அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிற நிலையில், தமிழக முதல்வரும் உடனடியாக இங்கே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு  அறிக்கையில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்