Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு நீட்டிப்பில் பிரதமர் மோடியின் அறிவிப்பு பின்பற்றப்படும்: தலைமை செயலர் சண்முகம்

ஏப்ரல் 11, 2020 03:49

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி வெளியிடும் அறிவிப்பை பின்பற்றுவோம் என தமிழக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் சண்முகம் கூறியதாவது:  பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு முதல்வர்களும் தற்போதைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் எனில் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நாம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாது எனவும் கருத்து கூறினர். முதல்வர் இபிஎஸ்., அவர்களும் பல்வேறு வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தார். அவர்களும் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தினர். பிரதமர் உடனான ஆலோசனையில் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் எனவும், டெலி மெடிசனை முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் வகைப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது போன்ற ஊரடங்கினை ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்துவதை விட நாடு தழுவிய ஊரடங்கினை பின்பற்ற வேண்டும் எனவும், அது குறித்து பிரதமர் அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஊரடங்கினை பின்பற்றிய மக்களுக்கு நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். டாக்டர்கள், போலீசார், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிடும் அறிவிப்பு எவ்வாறாயினும் அதனை பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்