![](admin/uploads/.636627d4873682.07428545.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சிக்கு ஒரே நாளில் ரயில்கள் மூலம் 2650 டன் அரிசி மற்றும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்து இறங்கின.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 42 வேகன்கள் இணைக்கப்பட்ட சரக்கு ரயில் மூலம் திருச்சி குட்ஷெட்டிற்கு 2650 டன் அரிசி மூட்டைகள் வந்தன. அவற்றை சுமை தொழிலாளா்கள் லாரிகளில் ஏற்றினா். பின்னா் இவையனைத்தும் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள அரசு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டன.
இதேபோல டெல்டா மாவட்டமான திருவாரூா் மற்றும் மயிலாடுதுறையில் தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு விளைந்த நெல் சாக்குப்பைகளில் நிரப்பப்பட்டு 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் ஜங்சன் குட்ஷெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வேகன்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் இருந்தன. அவற்றை தொழிலாளா்கள் இறக்கினா். அவை லாரிகளில் ஏற்றப்பட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா், புலிவலம் மற்றும் மணப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சரக்கு ரயில்களில் ஒரே நேரத்தில் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் வந்ததால் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பிற்பகல் வரை மட்டுமே தொழிலாளா்கள் பணிபுரிந்ததால் பாதியளவு மூட்டைகள் மட்டுமே இறக்கப்பட்டன. மீதமுள்ள மூட்டைகள் இன்று
(ஞாயிற்றுக்கிழமை) இறக்கப்பட்டு அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.