Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் இறந்தவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உடலை எரியூட்ட வேண்டும்: இலங்கை அரசு அறிவிப்பு

ஏப்ரல் 13, 2020 02:11

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், அவர்களின் உடல்களை கட்டாயமாக எரியூட்ட வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ''கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை 800 முதல் 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை எரியூட்ட வேண்டும். அரசு ஒப்புதல் வழங்கியுள்ள மயானத்தில், அதிகாரியின் மேற்பார்வையில் அவை எரியூட்டப்பட வேண்டும்.

இறந்தவருக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளும் உரிமை பெற்றிருப்பவர்களைத் தவிர, பிற எவரிடமும் உடல் ஒப்படைக்கப்படாது. அதேபோல், மயானத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும், இறந்த நபரை எரியூட்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் அந்த உடல் வைக்கப்படும் பெட்டியுடன் சேர்த்து எரியூட்டப்பட வேண்டும். திரும்பப் பயன்படுத்தும் வகையிலான பொருட்கள் முறையான சுத்தம் செய்யப்பட வேண்டும்.

எரியூட்டப்பட்டவரின் சாம்பலை அவருடைய ரத்த சொந்தம் வேண்டும் பட்சத்தில் வழங்கப்படும்'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் போராட்டம்

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்களின் வழக்கப்படி இறந்தவர்களின் உடலைப் புதைக்க வேண்டும். இந்நிலையில் இலங்கை அரசின் அறிவிப்பு முஸ்லிம்களின் மத உரிமையைப் பறிப்பதாக அரசியல் கட்சிகள் கண்டித்துள்ளன.

இலங்கையில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூவர் முஸ்லிம்கள். இந்நிலையில் அவர்கள் உடல் எரியூட்டப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசின் இச்செயல்பாடு குறித்து சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் கொரோனா பாதிப்பால் இறந்தவரின் உடலைப் புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அந்த ஆணையம் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்