Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஊரடங்கை மீறிய கடற்கரையில் குளித்த 17 வெளிநாட்டினர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோவளம் கடற்கரையில், கடலில் குளித்ததாக 17 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரளா வந்தபோது, ஊரடங்கினால் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், ஊரடங்கினால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஏப்.,14ம் தேதி, கோவளம் கடற்கரையில் 17 வெளிநாட்டினர் குளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது கேரள தொற்றுநோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 188, 269 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் தங்கியிருந்த ஐந்து ஓட்டல்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.