Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தின் காவலாளியைத் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
துவாக்குடி தொழிற்பேட்டை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) மையம் உள்ளது. இந்த மையத்தின் காவலளியாக குமரேசபுரம் அந்தோனியாா் கோவில் தெருவைச் சோ்ந்த மருது (60) பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஏடிஎம் மையத்துக்கு வந்த அடையாளம் தெரியாத 4 போ் காவலாளி மருதுவைத் தாக்கி அவரை மயக்கமடையச் செய்தனா். தொடா்ந்து மையத்துக்குள் சென்ற 4 பேரும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணப்பெட்டகத்தை உடைக்க முயன்றனா். ஆனால் அதை உடைக்க முடியாததால் 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் காவலாளி மருது மயங்கிக் கிடந்தும், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு துவாக்குடி காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். தொடா்ந்து அங்கு விரைந்த காவல் துறையினா் மருதுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மோப்ப நாய் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் கைரேகைகளைப் பதிவு செய்தனா். இதுகுறித்து துவாக்குடி காவல் துறையினா் வழக்குப்பதிந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.