Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதையில் வீடுபுகுந்து பா.ம.க. நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் பெண்ணாடத்துக்கு மாற்றம்; பா.ம.க. கொதிப்பு

ஏப்ரல் 16, 2020 01:04

சென்னை: “குடிபோதையில் ஊரே வேடிக்கை பார்த்துச்சே.. வீடியோ ஆதாரம் இருந்தும் வீடுபுகுந்து பா.ம.க. நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டன ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் டூவீலரை பறிமுதல் செய்ததுடன், அவைகளை விடுவிக்க இன்ஸ்பெக்டர் சுதாகர் லஞ்சம் வாங்கி உள்ளார். இப்படி லஞ்சம் வாங்குவதை மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சக்திவேல், வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டிருந்தார். அந்த ஆத்திரத்தில், சின்ன சேலம் இன்ஸ்பெக்டர் சுகாகர், சமீபத்தில் நள்ளிரவு 12 மணிக்கு குடிபோதையில் சக்திவேல் வீட்டுக்குள் புகுந்து அவரது சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினார்.

போதையில் கொடூரமாக இன்ஸ்பெக்டர் தாக்கியதை சக்திவேல் நண்பர்கள் வீடியோ எடுத்து அதையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். இது பா.ம.க. தரப்பை மட்டுமல்லாமல் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பார்வைக்கும் சென்றது. உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்து, சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்நிலையில், 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகர், தற்போது கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காட்டமாக வெளியிட்டுள்ள ட்வீட் பதிவு விபரம் வருமாறு:

நான்கு நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?
ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக, மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை. சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ராமதாஸ் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று பா.ம.க.வினர் ராமதாஸூக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்