![](admin/uploads/.5f3cd3315733b4.36164895.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டில் கல்லுாரி முதல்வரை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி வந்தவர் அசோகன். இவர் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்காமல் வருவதாகவும், உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வந்ததாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன. மேலும் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்து வருவதாக கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்கள் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகனின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அரசு தரப்பு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது மாணவர்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு கல்லூரி முதல்வர் அசோகனை பணியிடை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் அசோகன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் காளிதாஸ் என்பவருக்கு முதல்வர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.