Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத, தமிழக அரசு தரும் ரம்ஜான் அரிசி எங்களுக்கு வேண்டாம்: பள்ளிவாசல்கள் திடீர் முடிவு

ஏப்ரல் 18, 2020 03:55

திருவாரூர்: “ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம்.. சிஏஏ, குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி. என்.பி.ஆர். போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது. இதனை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்,” என்று திருத்துறைப்பூண்டியின் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.

கடந்த ஆண்டுகூட, இந்தாண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அரிசிக்கான அனுமதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்தாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதிக்ககுள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செயலாளர் சண்முகம் அறிவித்து இருந்தார். ஆனால், இந்த அரிசியை தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் அறிவித்துள்ளன. இதற்கு காரணம் சி.ஏ.ஏ. விவகாரம்தான்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டம், என்.ஆர்.சி. என்.பி.ஆர். போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது. அவைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். அதனால் அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம்.  திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்துக்குட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முடிவு செய்திருக்கின்றன. இது சம்பந்தமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்