Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவாரூரில் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கல்

ஏப்ரல் 20, 2020 08:29

திருவாரூர்: ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டத்தை திருவாரூரில் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதல் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்- ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரமலான் நோன்பிற்கான அரிசியை வழங்கி வருகிறார். தற்போது கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தலைமை செயலாளர் தமிழக ஹாஜிகளை அழைத்து நோன்பு கஞ்சிக்கு எவ்வாறு அரிசி வழங்குவது என ஆலோசித்தார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 2895 பள்ளிவாசல்களுக்கு அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களை கணக்கிட்டு ஒரு நபருக்கு 150 கிராம் வீதம் 5450 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதனை ஏற்று இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜமாத்தார்கள் மூலமாக அரசு வழங்குகின்ற அரிசியை பெற்று இஸ்லாமிய மக்கள் வீட்டிலேயே நோன்பு கஞ்சி காய்ச்சி கொள்ள வேண்டும். பள்ளிவாசல்கள் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் வருகிற 22-ந் தேதிக்குள் அரிசி கொடுக்கப்பட்டு விடும். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுவது குறித்து சூழ்நிலையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் முடிவெடுப்பார். கொரோனாவை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்பது ஊருக்கு உலகத்துக்கு தெரியும். மக்கள் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசுக்கு அரசியல் செய்ய தெரியாது. எதிர்க்கட்சிகள்தான் இதில் அரசியல் செய்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்