Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தில் காங்கிரஸ் காரியக்கமிட்டி இன்று கூடுகிறது

மார்ச் 12, 2019 06:24

ஆமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் தலைநகர் காந்திநகரில் நடக்கிறது. கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா, மன்மோகன் சிங், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வியூகம் மற்றும் கூட்டணி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் பிரசார திட்டம், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் இணைந்து பங்கேற்கும் முதல் உயர்மட்டக்குழு கூட்டம் இதுவாகும். 

இந்த கூட்டத்தை தொடர்ந்து கட்சி சார்பில் காந்திநகரின் அடலாஜ் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். 

மேலும் கட்சியின் பொதுச்செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரியங்காவும் இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறார். தீவிர அரசியலில் இணைந்தபின் பிரியங்கா உரையாற்றும் முதல் கூட்டம் இதுவாகும். பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்களை பங்கேற்கச்செய்ய மாநில காங்கிரசார் திட்டமிட்டு உள்ளனர். 

முன்னதாக கட்சியின் மூத்த தலைவர்கள் அங்குள்ள காந்தி ஆசிரமத்துக்கு செல்கின்றனர். காந்தியடிகள் தண்டி யாத்திரை தொடங்கிய தினம் மற்றும் அவரது 150-வது பிறந்த ஆண்டையொட்டி அங்கு அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் புகழ்மிக்க காரியக்கமிட்டி கூட்டம் குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு நடந்திருந்தது. அந்தவகையில் 58 ஆண்டுகளுக்குப்பிறகு முதல் முறையாக தங்கள் மாநிலத்தில் மீண்டும் காரியக்கமிட்டி கூடுவதால் மாநில காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். 

முன்னதாக கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த காரியக்கமிட்டி கூட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்