![](admin/uploads/.5cef6a997639a9.17509196.gif)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: “ஊரடங்கு காலக்கட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட பணிகள் மற்றும் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்,” என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகிற மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். அதேசமயம், ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் ஊரங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனினும், தமிழகத்தில் தளர்வுகள் இல்லை எனவும் ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என அறிவித்த மத்திய அரசு, அது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில், தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூ.229 லிருந்து ரூ.256ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.