Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி அருகே கார் மோதியதில் கணவன், மனைவி, மகன் பரிதாப பலி

ஏப்ரல் 24, 2020 08:41

நெல்லை: திருநெல்வேலி அருகே கணவர் நிறைமாத கர்ப்பிணியுயான மனைவியுடன் டூவீலரில் சென்ற போது எதிரே படுவேகமாக வந்த கார் இவர்கள் மீது மோதியதில் 5 வயது குழந்தை, கணவர், கர்ப்பிணி மனைவி ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ளது குமாரசாமிபுரம். இங்கு வசித்து வந்தவர் மாதவன் துரை. இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி. மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு பாரதிராஜா என்ற 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ராஜேஸ்வரி மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் பிரசவத்துக்காக அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஊரடங்கு என்பதால் மகனுடன் மாதவன் மட்டும் தனியாக வீட்டில் முடங்கி இருந்துள்ளார். எனினும், இந்த நேரத்தில் மனைவி தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று நினைத்த மாதவன், அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி, மாமியார் வீட்டிற்கு சென்ற மாதவன், டூவீலரில் மனைவியை உட்கார வைத்து அழைத்து வந்தார். கூடவே மகன் பாரதிராஜாவையும் அழைத்து சென்றிருந்தார். 3 பேரும் பைக்கில் குமாரசாமிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

முக்கூடல்- கடையம் சாலையில் வந்தபோது, எதிரே ஒரு கார் தாறுமாறாக வேகமாக வந்து டூவீலரில் மோதி கார் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்,மாதவன், பாரதிராஜா இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். கர்ப்பிணி மனைவி தூக்கி வீசப்பட்ட நிலையில் அருகில் இருந்தோர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. தகவலறிந்து முக்கூடல் போலீசார், வழக்குப் பதிவு செய்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கர்ப்பிணிக்கு நிகழ்த்தப்பட்ட உடற்கூறு ஆய்வின் போது வயிற்றில் உள்ள சிசுவும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் டூவீலரில் மோதியது எதிரே வந்த ஒரு சொகுசு கார் என்றும், வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது பேங்க் அதிகாரி சுப்பிரமணி என்பதும் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.களுக்கு பணம் போடுவதற்காக இவர் சென்று கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததுடன், கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசுவும் சேர்ந்து உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்