Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலுக்கு தடை: சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு

ஏப்ரல் 25, 2020 01:05

சென்னை: கொரோனா வைரஸ் பரிசோதனையில் தவறான முடிவுகளை தரும் ‘ரேபிட் டெஸ்டிங் கிட்’களை கொள்முதல் செய்ய தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 37 லட்சம் ரேபிட் டெஸ்டிங் கிட்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனிப்பட்ட முறையில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிட்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த கிட்கள் ஒன்பது இந்திய நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இதில், சீனாவைச் சேர்ந்த வொண்ட்ஃபோ நிறுவனமும் ஒன்று. இந்த கருவிகளை புனேவில் உள்ள தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைக்கு உட்படுத்தாமல், கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அந்த கருவிகளை கொள்முதல் ஆர்டர்களுக்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “கொரோனா வைரஸ் பரிசோதனையில் தவறான முடிவுகள் வந்ததால் ரேபிட் டெஸ்டிங் கிட்களை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த கருவிகளை தேசிய நச்சு உயிரியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்